2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சர்வதேச ரீதியில் விரிவாக்கப்படும் மெக்டைல்ஸ் லங்கா செயற்பாடுகள்

Freelancer   / 2023 டிசெம்பர் 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய-பசிபிக் மற்றும் பாரசீக-வளைகுடா பிராந்தியங்களில் ஸ்தாபிக்கப்பட்ட பல காட்சியறைகள் மற்றும் அலுவலகங்களுடன், மெக்சன்ஸ் டைல் லங்கா (மெக்டைல்ஸ்) சர்வதேச சந்தைகளில் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது.

மெக்சன்ஸ் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரான மிஸ்வர் மகீன் கூறும்போது, “வடிவமைப்பில் மட்டுமல்லாது நீண்ட கால உழைப்பு மற்றும் அன்றாட பாவனைக்கு முக்கியமான பண்புகளுடனான    ஐரோப்பிய தரத்திலான டைல்களை இந்தப் பிராந்தியங்களுக்கு எடுத்துச் சென்று தரையோடுகள் பிரிவில் சிறந்த தீர்வுகளை வழங்குவதே எங்களது மூலோபாயமாக காணப்படுகிறது. தயாரிப்பு உயர் தரம் கொண்டதாகவும் இத்தாலிய மற்றும் ஸ்பானிய டைல்களுக்கு நிகரானதாகவும் இருப்பதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பைக் கொண்டு வர கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் ஆற்றல் மற்றும் ஏனைய நாடுகளுடனான இணைப்புத்திறன் ஆகியவற்றை நாங்கள் எமக்கு அனுகூலமாக பயன்படுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமது தொழிற்சாலைகளில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் உள்ளூர் சந்தையில் தயாரிப்புக்களை வழங்குவதில் முழுமையான திறனை அடைந்து, இப்போது அதன் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. அவர்களின் உற்பத்தி தரம் உலகளவில் விரும்பப்படும் இலங்கை மூலப்பொருட்களிலிருந்து பெறப்படுவதுடன், தரையோடுகளை உற்பத்தி செய்வதில் இது 85% ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மீதமுள்ளவை இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃப்ரிட்ஸ் (frits) மற்றும் கிளேசஸ் (glazes) போன்ற உயர்தர ஐரோப்பிய தர பொருட்களிலிருந்து வருகின்றன. இவை அனைத்தும் இணைந்து, டைல் உற்பத்தியில் ஒருவர் அடையக்கூடிய தொழில்துறை தரங்களின் உச்சத்தை மெக்டைல்ஸ் அடைய உதவியது என்று நிறுவனம் கூறுகிறது.

தற்போது இந்நிறுவனம் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மாலைதீவு, நைஜீரியா, கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. “இந்திய-பசிபிக் மற்றும் பாரசீக-வளைகுடா பகுதிகளுக்கான எங்கள் விரிவாக்கம் நன்கு சிந்தித்து, திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும். ஏனெனில் கட்டுமானத்தில் இந்நாடுகளின் வளர்ச்சி வாய்ப்பு தொடர்பான கணிப்புகள் அதிகமாக உள்ளன. நாங்கள் இப்போது அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற ஐரோப்பிய மற்றும் பசிபிக் சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளதுடன் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இலங்கை தேயிலை அல்லது ஆடைத் தொழில் துறை போன்று இலங்கைக்கான மற்றொரு தனித்துவமான ஏற்றுமதி வர்த்தகநாமத்தை கட்டியெழுப்புவதற்கான முதல் படியை எடுப்பதே எமது இறுதி இலக்காகும்,” என முகாமைத்துவப் பணிப்பாளர் கூறினார்.

இதற்கிடையில், நைஜீரிய கட்டுமாண சந்தை, 2022 இல் 135.9 பில்லியன் டொலர் மதிப்புடையதாக காணப்பட்டதுடன், அடுத்த 3 ஆண்டுகளில் 2% வளர்ச்சி வீதத்தை அனுபவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வீடமைப்பு மற்றும் கைத்தொழில் கட்டுமாண திட்டங்களில் கணிசமான முதலீடுகளால் முன்னெடுக்கப்படுகிறது. 17.3 பில்லியன் டொலர் மதிப்புடைய கென்யாவின் கட்டுமாணச் சந்தை, அரச-தனியார் கூட்டு முயற்சிகள் மற்றும் தனியார் முதலீடுகளால் ஆதரிக்கப்பட்டு, வருடாந்த வளர்ச்சி வீதம் 5% ஐத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள முக்கிய துறைகளில் குடியிருப்பு, வணிக, கைத்தொழில் மற்றும் நிறுவனக் கட்டுமாணம் ஆகியவை அடங்கும்.

மாலைதீவு கட்டுமாணத் துறை அடுத்த மூன்று ஆண்டுகளில் 7.7% என்ற நிலையான வருடாந்த வளர்ச்சி வீதத்திற்கு தயாராக உள்ளதுடன், இது அரசாங்க உட்கட்டமைப்பு திட்டங்கள், தனியார் துறை குடியிருப்பு முயற்சிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் முன்னேற்றம் ஆகியவற்றால் தூண்டப்படுகிறது. அதே நேரத்தில், இந்தோனேசிய கட்டுமாணத் துறை 2023இல் 3% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசாங்கம் அளிக்கின்ற முக்கியத்துவத்தால் ஆகும். ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபிய பொருளாதாரத்தின் சாரமாக இருக்கும் கட்டுமாணத் துறை, இந்த நாடுகளின் பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X