2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுவிஸ் அரசாங்கத்துடன் பவர் கைகோர்ப்பு

S.Sekar   / 2022 டிசெம்பர் 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விருந்தோம்பல் கல்வித் துறையை மேம்படுத்தும் நோக்கில், ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின், சுவிஸ் ஹொஸ்பிட்டாலிட்டி அன்ட் மனேஜ்மன்ட் அகடமி (SHMA), அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் (SDC) அமைப்புடன் அண்மையில் அரச மற்றும் தனியார் துறை பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பவர் நிறுவனம் பரந்தளவு வியாபார ஈடுபாடுகளைக் கொண்டுள்ளது.

உத்தியோகபூர்வ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பவர் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரெல்ஃவ் ப்லாசர் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி. டி. ஃபர்க்லர் ஆகியோர் உடன்படிக்கையை பரிமாறிக் கொண்டனர்.

தொற்றுப் பரவல் உச்ச கட்டத்தில் காணப்பட்ட காலப்பகுதியில் நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன், பவர் மற்றும் SDC இன் பெருமளவு பங்கேற்பை பதிவு செய்திருந்தது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் ஸ்தம்பித்திருந்த கால கட்டத்தில், திறன் படைத்தவர்களின் புலம்பெயர்வுடன், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த RIESCO நிகழ்ச்சி தொடர்பில் ரொல்ஃவ் ப்லாசர் அறிந்து கொண்டதுடன், அதிகரித்துச் செல்லும் திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான உடனடியானதும் பிரயோக ரீதியானதுமான தீர்வாக இனங்கண்டிருந்தார்.

கடந்த ஆண்டில், பவர் நிறுவனத்தின் அதிகாரிகள், சுவிஸ் தூதுவருடன் சந்திப்பை முன்னெடுத்ததுடன், கல்விசார் நிலைப்பாட்டில் SHMA மற்றும் பல்வேறு தீர்வுகளை அறிமுகம் செய்திருந்தனர். இந்த ஆண்டின் முற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மேலதிக கலந்துரையாடல்களின் பிரகாரம், SDC உடன் கைகோர்த்து செயலாற்றுவதை பவர் பரிந்துரைத்திருந்ததுடன், அதனூடாக நாட்டினுள் RIESCO நிகழ்ச்சியை முன்னெடுக்கத் தீர்மானித்தது.

உலகின் சிறந்த மட்டத்தில் காணப்படும் விருந்தோம்பல் கல்வியில் சுவிட்சர்லாந்தின் நற்பெயர் மற்றும் தர நியமங்களை இலங்கையில் உள்வாங்கி, நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு அவசியமான தீர்வாக முன்மொழிந்திருந்ததுடன், ஆயிரக் கணக்கான வாழ்வாதாரங்கள் இந்தத் துறைகளில் தங்கியிருக்கும் நிலையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடிவதுடன், பொருளாதாரத்திலும் பெருமளவு பங்களிப்பை வழங்கக்கூடியதாக அமைந்திருக்கும். அதனூடாக, கிராமிய மட்டங்களைச் சேர்ந்த திறன்படைத்த இளைஞர்கள் மத்தியில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிபுணர்கள் தோற்றுவிக்கப்படுவதை உறுதி செய்கின்றது. தொழிற்துறையில் காணப்படும் திறன் இடைவெளியைக் குறைத்துக் கொள்ள இந்தத் திட்டம் பங்களிப்பு வழங்கும் என்பதுடன், அரசாங்கத்தின் மீது காணப்படும் சுமையைத் தணிப்பதாகவும், நாட்டை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.

Hotel & Gastro Formation இனால் வடிவமைக்கப்பட்ட RIESCO நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, அரச நலன்புரிக் கட்டமைப்பில் பெருமளவில் தங்கியிருக்கும் வகையில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரை இலக்கு வைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் உள்ளம்சம் மற்றும் பொருளடக்கங்கள் போன்றவற்றினூடாக, குறுகிய காலப்பகுதியில் இந்தக் கற்கையை பூர்த்தி செய்வதுடன், தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு அவசியமான திறன்களைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து, விருந்தோம்பல் துறையில் பங்களிப்பு வழங்குவோராக மாற்றி பொருளாதாரத்திலும் பங்களிப்புச் செய்யச் செய்கின்றது.

அரச மற்றும் தனியார் துறைகளுடன் பணியாற்றி, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் கட்டமைப்பினூடாக இந்தத் திட்டத்தை நிலைபேறானதாகப் பேண SHMA திட்டமிட்டுள்ளது. SSG திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவதனூடாக, இலங்கையில் ஏற்கனவே காணப்படும் நீண்ட மற்றும் பாரம்பரிய விருந்தோம்பல் கற்கைகளுக்கு பதிலாக நாட்டிலுள்ள பயிலுநர்களுக்கு பெருமளவு அனுகூலங்கள் கிடைக்கும்.

விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் சுவிஸ் தொழிற்துறை திறன்கள் விருத்தி (VSD) பாடவிதானத்துக்கமைய, இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதை SHMA உறுதி செய்வதுடன், உள்நாட்டு பாடவிதானங்களை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் பல்வேறு பயிலல் நிலையங்களை நிறுவும். பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சிகளினூடாக, SHMA இனால் அர்த்தமுள்ள பயிற்றுவிப்பு வழிமுறைகளை மேலும் உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

SSG நிகழ்ச்சித்திட்டத்தினூடாக சுமார் 2240 திறன் படைத்தவர்களை மூன்றாண்டு காலப்பகுதியில் தயார்ப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .