2025 மே 03, சனிக்கிழமை

நெல் விளைச்சல் குறைவு; வீதியில் நிற்கும் விவசாயிகள்

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில், ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூட்டைகளே விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை,விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3,900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், மஞ்சல் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை, கிருமிநாசினி, கழைநாசினிகளின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உரிய விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏக்கருக்கு ஒன்றரை இலட்சத்துக்கு மேல் செலவு செய்து விவசாய செய்கை மேற்கொண்ட நிலையில் ஏக்கருக்கு 50,000 ரூபாய்கு குறைவான தொகையே கிடைத்துள்ளதாகவும் ஏக்கருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக   விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் உர பிரச்சினையால் ஏற்பட்ட நட்டத்துக்கே உரிய நட்டஈட்டை அரசாங்கம் வழங்காத நிலையில், இம் முறையாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, விவசாயிகளை காப்பாற்ற முன்வரவேண்டும் என மன்னார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னாரில் உள்ள பிரதேச செயலகங்களால் நெல் கொள்வனவு இடம்பெற்றாலும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் நெல்லை கொள்வனவு செய்வதால், விவசாயிகள்,  தனியார் கொள்வனவாளர்களால் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்ற குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X