2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறந்து போன தந்தையை தங்கையின் திருமணத்துக்கு வரவழைத்த அக்கா!

J.A. George   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் தஞ்சாவூரில் இறந்து போன தந்தையின் சிலையை தங்கையின் திருமணத்துக்கு  அக்கா கொண்டுவந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் செல்வம் (61). தொழிலதிபர். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் இறந்து விட்டார். உயிருடன் இருந்தபோது, தனது 3 மகள்களில் 2 மகளுக்கு திருமணம் செய்துவிட்டார் செல்வம்.

இந்நிலையில், அவரது 3வது மகள் லட்சுமி பிராபாவுக்கு (25) திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், லட்சுமியின் மனதில் தந்தை இல்லாத திருமணத்தை நினைத்து கவலை கொண்டுள்ளார்.

இதனால் லண்டனில் மருத்துவராக இருக்கும் அவரது மூத்த சகோதரி, லட்சுமியின் வருத்தத்தினை தெரிந்து கொண்டு, அப்பா இல்லாத குறையினை போக்க அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

மூத்த சகோதரி புவனேஸ்வரி, தனது கணவர் கார்த்திக் உதவியுடன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு, தனது தந்தை செல்வத்தின் முழு உருவச் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார்.

இதையடுத்து, பட்டுக்கோட்டையில் லட்சுமி பிரபாவின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. அப்போது, தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சகோதரி புவனேஸ்வரி தந்தை செல்வத்தின் முழுஉருவச் சிலையை புவனேஸ்வரி திருமண மேடையில் நிறுத்திவைத்தார்.

இதைக்கண்ட தங்கையும் மணமகளுமான லட்சுமி பிரபாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உண்மையில் தந்தையின் சிலையை பார்த்த லட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர், அந்த சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர். தாய் கலாவதி மற்றும் தந்தையின் சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .