Gavitha / 2016 ஜூலை 12 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அரசியலமைப்பு மாற்றத்தின்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையான, கல்முனை கரையோர மாவட்டம் உள்ளடக்கப்படாவிட்டால்;, பிரதியமைச்சர் பதவியை தான் இராஜினாமா செய்வதுடன், புதிய அரசியலமைப்புக்கான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்ட பின்னர் அதன் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், மாநகர முதல்வர் செயலகத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'தற்போது எமது நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் மிகத் தீவிரமாக சிந்திக்கப்படுகிறது. இதன்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் பேசப்படுகின்றபோதிலும் இந்நாட்டில் 10 சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பில் எதுவும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.
குறிப்பாக, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவருகின்ற கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் மூச்சுக்கூட விடுவதாக இல்லை. அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் எதிர்ப்பார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் அபிலாஷைகளை குழிதோண்டி புதைக்க முடியாது.
அரசாங்கம் நினைத்தால் ஓரிரு நாட்களில் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்க முடியும். அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டத்தில் 70 சதவீதமாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்தும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படுகின்றனர். இது எமது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.
அதனால் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி, நான் வீதியில் இறங்கி போராடப் போகின்றேன். மக்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். அதற்கு எமது கட்சித் தலைவரின் அனுமதியை கோரவுள்ளேன். பிரதி அமைச்சுப் பதவிக்காகவும் வாகனங்களுக்காகவும் எமது சமூகப் பிரச்சினைகளை கண்டும் காணாமலும் நான் மௌனமாக இருக்கப்போவதில்லை.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் கேள்விக்குறியாக மாறி வருகின்றது. எமது ரசூல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துகின்ற அளவுக்கு ஞானசார தேரரின் அட்டகாசங்கள் தலைவிரித்தாடுகின்றன. எமது ரசூல்
தூசிக்கப்பட்டமை தொடர்பில், நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிட்டு முஸ்லிம்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லவில்லை என்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.
இந்த நிலை நீடிக்குமாயின் கடந்த ஆட்சியாளர்கள் மீது முஸ்லிம்கள் வெறுப்புக் கொண்டு, அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது போன்றதொரு சூழ்நிலை ஏற்படலாம் என்று இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்' என்றார்.
18 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
36 minute ago