2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட்

Mithuna   / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் அரசு மருத்துவர் தன் வருங்கால மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் ( சத்திர சிகிச்சை நிலையம்) எடுத்த போட்டோ ஷூட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட‌த்தில் உள்ள பரமசாகர் அரசு மருத்துவமனையில் அபிஷேக் (29) என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் அங்குள்ள ஆபரேஷன் தியேட்டரில் தன் வருங்கால மனைவியுடன் ‘ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்' ( திருமணத்துக்கு முன்பாக எடுக்கப்படும் புகைப்படம்) நடத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு அவர் அறுவை சிகிச்சை செய்வதை போலவும், அதற்கு அவரின் வருங்கால மனைவி உதவி செய்வதை போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்களும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘‘அரசுமருத்துவமனைகள் மிக உன்னதமான நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைதன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மருத்துவர் அபிஷேக் மருத்துவமனையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டது உறுதியாகியுள்ளது. எனவே அவரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பரமசாகர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .