2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இனியும் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவரா?

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தொடர்ந்தும் ‘கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற தகுதியோடு இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கின்றது. 

கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவை, சம்பந்தனை நிராகரித்துக் கொண்டு, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஒன்றுக்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47ஆவது கூட்டத் தொடரை முன்வைத்து, கூட்டமைப்பு என்ற அடையாளத்தைத் தவிர்த்துக் கொண்டு, டெலோவும் புளொட்டும் இன்னும் சில கட்சிகளும் இணைந்து அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம், அது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரை, தமிழ்த் தேசிய  கட்சிகளும் தரப்புகளும், தமிழ் மக்களுக்கான நீதிக் கோரிக்கைகளை அடைவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துவதைக் காட்டிலும், தங்களது தனிப்பட்டதும் கட்சி சார் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. இம்முறையும் அவ்வாறான காட்சிகளே அரங்கேறுகின்றன. 

தமிழ்த் தேசிய  கட்சிகளிடம் இருந்து, இம்முறை மூன்று கடிதங்கள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு சம்பந்தனால் ஒரு கடிதமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்னொரு கடிதமும் டெலோவின் அழைப்பின் பேரில் புளொட், விக்னேஸ்வரன் உள்ளிட்ட கூட்டினால் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 

இலங்கை தொடர்பில், இந்தக் கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கையே சமர்ப்பிக்கப்படவுள்ள சூழலில், அது தொடர்பிலான அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஏற்கெனவே தயாரித்து முடித்துவிட்டது. ஆனாலும், தங்களது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக, தமிழ்த் தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பி நாடகம் ஆடுகின்றன.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதமொன்றை அனுப்புவது தொடர்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனிடம் அறிவித்து, அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 

அந்த விடயம், டெலோவின் அழைப்பின் நிமித்தம் கூடிய கட்சிகளிடமும் உதிரிகளிடமும் இணைய வழி கலந்துரையாடலொன்றின் போது அறிவிக்கப்பட்டதாக சுமந்திரன் கூறுகிறார். சம்பந்தனின் கடிதத்தின் பிரதிகள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் பின்னர் கையெழுத்துகள் பெறப்படுவதற்கு முன்னராகவே, அவசர அவசரமாக  டெலோவின் அழைப்பில் கூடிய குழுவினர், இன்னொரு கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள். 

டெலோவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் புளொட்டின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரைத் தவிர்ந்தால், கூட்டப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளத்தோடு ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் மாத்திரம் கடிதத்தில் கையெழுத்திட முடியும். அப்படி நடந்தால், தமிழரசுக் கட்சியின் கடிதம் எனும் அடையாளத்தைப் பெறும் என்பதால் அது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. அதனாலேயே, சம்பந்தனின் கூட்டமைப்பின் தலைவர் எனும் அடையாளத்தோடு, குறித்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கின்றது.

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பில், தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்துக் கொண்டு கடிதமொன்றை வரைவது தொடர்பில் டெலோ, கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு, எந்தவொரு தருணத்திலும் அறிவிக்கவில்லை. தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுத்து, அவரும் அந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டிருக்கின்றார். 

இரு தசாப்த காலமாக, தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிப்பு விடுக்காமல், இன்னோர் அணியொன்றை அமைக்கும் முயற்சிகளை டெலோ முன்னெடுக்கின்றது என்றால், அது செல்வம் அடைக்கலநாதனதோ, குருசாமி சுரேந்திரன் உள்ளிட்டவர்களின் துணிச்சலான நடவடிக்கை என்று மாத்திரம் கொள்ள முடியாது. 

ஏனெனில், கூட்டமைப்பு சார்ந்து தமிழரசுக் கட்சி ஏக நிலையில் முடிவுகளை எடுத்த அனைத்துத் தருணங்களிலும், டெலோ அதற்கு இணங்கியே சென்றிருக்கின்றது. அவ்வாறான இணக்கம், தவறு என்று சுட்டிக்காட்டப்பட்ட போதெல்லாம், தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கருத்தில் கொண்டு செல்வம் அடைக்கலநாதன் அமைதியாகவே இருந்தார். 

அப்படிப்பட்ட சுபாவத்தைக் கொண்டிருப்பவரின் எண்ணங்களில், கூட்டமைப்பைத் தாண்டிய சிந்தனையொன்று ஏற்பட்டு, அது  செயலுருவம் பெறுகின்றது என்றால், அந்தப் பின்னணியை ஆய்ந்து ஆராய வேண்டியும் ஏற்படுகின்றது.

சம்பந்தன் காலத்துக்குப் பின்னராக கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அல்லது சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்களிடம் பகிரப்படும் சூழலே காணப்படுகின்றது. 

சிறிதரனின் இலக்கு, தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற அடிப்படையில், கூட்டமைப்பின் தலைமைத்துவம் சுமந்திரனிடம் செல்லும் வாய்ப்புகளே உண்டு. 

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களில், பிராந்திய வல்லரசின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரிகள், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நடத்திய பேச்சுகளின் போது, இந்த விடயம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. 

பிராந்திய வல்லரசுக்கு, சுமந்திரன் மீது குறிப்பிட்டளவான அதிருப்தி உண்டு. ஏனெனில், தங்களது எல்லா இழுப்புகளுக்கும் அவர் வளைந்து கொடுக்கமாட்டார் என்பது அதற்கான காரணம். அப்படியான சூழலில், கூட்டமைப்புக்கு மாற்றாக பலமான கூட்டணியொன்றைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கி, தங்களது அனைத்து ஆணைக்கும் ஆடும் ஒரு பொம்மையைத் தலைவராக்க வேண்டும் என்பது அவா. 

அந்த எண்ணப்பாடுகளின் போக்கில்தான், டெலோவையும் புளொட்டையும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வைத்து, விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான அத்திவாரத்தைப் போடுகின்றது.  

இந்தப் பின்னணியில்தான், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வெற்றிக்காகத் தங்கியிருக்கும் சூழலில் இருந்து வெளியேறும் துணிவு டெலோவுக்கு வருவதற்கு காரணமாகும்.

கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு மாறாக, தலைமைக்கு அறிவிக்காமல் டெலோவும் புளொட்டும் நடந்து கொண்ட விதம், தார்மிகத்துக்கு புறப்பானது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுமந்திரன் குறைபட்டார். அவர், ‘துரோகிகள்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லையே அன்றி, அவர்களை நோக்கி, கடந்த கால ‘அரச ஒத்தோடிகள்’ என்கிற அடையாளத்தையும் பதிவு செய்தார். 

இவ்வாறான பிரளங்களுக்குப் பின்னரும் சம்பந்தனோ, கூட்டமைப்பை யாராலும் பிளவுபடுத்த முடியாது, கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பணிக்கும் என்று கூறியிருக்கின்றார்.

கூட்டமைப்பு தோற்றம் பெற்றது முதல், அதன் தலைவராக சம்பந்தன் இருந்து வந்தாலும், உத்தியோகபூர்வ கடிதங்களில் கையெழுத்திடும் போது, அவர் தன்னை தமிழரசுக் கட்சியின் பாராளுன்றக் குழுத் தலைவர் என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றார். 2015க்குப் பின்னரே, அவர் தன்னை கூட்டமைப்பின் தலைவர் என்று குறிப்பிட்டு கடிதங்களில் கையெழுத்திட்டார். 

ஆனால், இன்றைக்கு மீண்டும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எனும் அடையாளத்துக்கே சம்பந்தன் செல்ல வேண்டியிருக்கின்றது. ஏனெனில், கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர, இருந்தவர்கள் எல்லோரும் வெளியேறிச் சென்றுவிட்டதான சூழலே இன்றிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு  பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு பெற்ற ஏக நிலை வெற்றியோடு, அதன் வீழ்ச்சி ஆரம்பித்திருந்தது. இந்தப் பத்தியாளர் அதனை அடிக்கடி சுட்டிக்காட்டியும் வந்திருக்கின்றார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அது அப்பட்டமாக வெளிப்பட்டது. மக்களுக்கான நலன், நீதிக் கோரிக்கைகள் என்கிற நிலைகள் தாண்டி தனிப்பட்ட நலன், பதவி, பகட்டு அதற்கான குழிபறிப்புகள் என்பதே அரசியல் என்ற நிலைப்பாட்டுக்குள், கூட்டமைப்பின் கட்சிகளும் அதன் தலைவர்களும் எப்போதோ வந்துவிட்டார்கள். 

அந்த நிலைதான், இந்தச் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதற்கான பொறுப்பை சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தமிழ் மக்களின் விடுதலைக்காக, பல பேரின் இரவு - பகல் பாராத உழைப்பால் உருவாகிய கூட்டமைப்பு என்கிற ஓர் உன்னத அடையாளம், கண் முன்னாலேயே, அழிந்து போவதைக் காணுவது வேதனையானது. இப்போது அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .