2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் பிரச்சினைகளை கூறுவது ஏன்?: அமீர் அலி

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மஹிந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்துவிட்டதாக தேர்தல் காலங்களில் மாத்திரம் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஏனைய நாட்களில் ஏதும் பிரச்சினைகளை கூறாமல் இருப்பதன் மர்மம் என்ன என்று முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் ஓட்டமாவடியில் இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை. மார்க்க கடமைகளை செய்ய முடியாது என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்த கையோடு அமைச்சு பொறுப்பைப் பெற்றுக் கொள்வதை என்னவென்று பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் பள்ளிவாயலுக்குச் செல்ல முடியாது புனித நோன்பு காலத்தில் மார்க்க கடமைகளைச் செய்ய முடியாமல் உள்ளது அதனால ;தான் முஸ்லிம் காஙகிரஸ் தனித்து மர சின்னத்தில் உங்கள் முன் வந்துள்ளது என்று கூறும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அரசுடன் இணைந்தே போட்டியிடுகிறது  என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

நாங்கள் அரசோடு இருந்து வந்த காலம் வரை முஸ்லிம்களுக்கு நாட்டில் எழுகின்ற அனைத்து தீய சக்திகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்தே வந்துள்ளோம் அத்தோடு சமூக பிரச்சினைகளை விமர்சிக்காமல் உரியவர்களுடன் விவாதித்து தீர்வை பெற்றே வந்துள்ளோம் இதே போன்று தான் தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சனையும் ஜனாதிபதியுடன் பேசி தீர்வு கண்ட விடயமாகும்.

நடைபெற போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு சிறு விடயம் ஒன்றிற்காகவே அதாவது ஆசன ஒதுக்கீட்டு பிரச்சினைக்காகவே வெற்றிலைச் சின்னத்தை விட்டு மர சின்னத்தில் வந்துள்ளார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஆசன ஒதுக்கீடு கிடைத்திருந்தால் வெற்றிலையில் தான் கேட்டு இருப்பார்கள் அப்போது நிச்சயமாக ஆதரித்தே பேசி இருப்பார்கள் இது தான் இவர்களது கொள்கையும் கோட்பாடுமாகும். 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு பேச்சும் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் ஒரு பேச்சும் பேசி இன்னும் மக்கள் மடமைக்குள் இருக்கின்றார்கள் என்ற நப்பாசையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்தவம் இருப்பது வேடிக்கையானது.

மக்கள் அரசியலில் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதற்கு நடைபெற போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒரு கலமாக அமையும்" என்றார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி மங்கள செனரத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தயசிறி திசேரா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .