2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி மாணவர்களுக்கு அநீதியிழைப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த உயர்தரக் கல்வியை தொடர்வதற்கு, இரத்தினபுரி மாவட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது, வேதனைக்குரிய விடயமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

'கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகத் துறைகளில் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கு உசிதமானதும், வசதியானதுமான பாடசாலைகள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாதிருப்பதால், அம்மாவட்ட தமிழ் மாணவர்கள், நுவரெலியாவிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், தமது உயர்தரக் கல்வியை தொடர்வதற்கு முயன்றுள்ளனர். இந்நிலையிலே, இம்மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் கல்வியைத் தொடர்வதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.  இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'இரத்தினபுரியைச் சேர்ந்த சில பெற்றோர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற தமது பிள்ளைகளுக்கு, சிறந்த பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முயற்சித்தனர். அதற்கமைய அவர்களுக்கு சில பாடசாலைகளிலிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இதனால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 17 தமிழ் மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர உயர்தரக் கல்வியை தொடர்வதற்காக தமது பெற்றோர் சகிதம், நுஃகொட்டகலை தமிழ் வித்தியாலயத்துக்;குச் சென்றபோது, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை  இணைத்துக்கொள்ள முடியாது எனவும் இது தொடர்பில், மத்திய மாகாண சபையானது,  உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும், பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிஷ்ணன், மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் வே.ராஜாராம் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளேன்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தகுந்த பாடசாலைகள் அமையும் வரை, இம்மாணவர்களுக்கு கொட்டகலையில் கல்வியைத் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக, மேற்படி பெற்றோருக்கு உறுதியளித்துள்ளேன்' என அவர் மேலும் கூறினார்.

'தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக இரத்தினபுரி மாவட்ட மக்கள், பேதங்களை மறந்துச் செயற்பட வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .