2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

கட்டட வசதிகளின்றி மாணவர்கள் அவதி

Kogilavani   / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட கலஹா ஸ்ரீ சண்முகா பாடசாலை, தரம் ஒன்றுக்குரிய வகுப்புடன் மட்டும் கடந்த 5 வருடங்களாக இயங்கி வருவதால், இந்தப் பாடசாலையை கலஹா இராமகிருஷ்ணா பாடசாலையுடன் இணைப்பதற்கு, மத்திய மாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ், கடந்த 2013ஆம் ஆண்டு கலஹா இராமகிருஷ்ணா பாடசாலையின் ஆரம்பப்பிரிவு வேறாக்கப்பட்டு, இந்தப் பாடசாலையின் ஆசிரியர் விடுதியில் ஸ்ரீ சண்முகா பாடசாலை என்று, புதிய பாடசாலை ஏற்படுத்தப்பட்டது.

'எனினும், இந்தப் பாடசாலைக்கு நிரந்தர காணி ஒன்றில்லாத காரணத்தால், தொடர்ந்து இந்தப் பாடசாலை தரம் ஒன்றுடன் 76 மாணவர்களை உள்ளடக்க இயங்கி வருகிறது. தரம் இரண்டு மாணவர்கள், இராமகிருஷ்ண பாடசாலைக்கு வருடந்தோறும் அனுமதிக்கப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.

'தற்போதுள்ள ஸ்ரீ சண்முகா பாடசாலையில், எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாத காரணத்தால், மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

'இந்நிலையில், கலஹா இராமகிருஷ்ணா பாடசாலையில் தனியாக ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிக்குப் பெரும்பாலான பெற்றோரும் பழைய மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

'எனவே, ஸ்ரீ சண்முகா பாடசாலைக்கு உரிய நிலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது இந்தப் பாடசாலையின் தரம் ஒன்றை, கலஹா இராமகிருஷ்ணா பாடசாலையுடன் இணைப்புச் செய்வதற்கு மத்திய மாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .