2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

“இலங்கைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பை, மலையக இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்றுறை தலைவருமான அ.அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.   

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  

“இப்பதவிகளுக்கான கல்வித் தகைமைகள் மற்றும் தகுதிகள் அதிகளவில் மலையக இளைஞர்களுக்கு இருப்பதால், சம்பந்தப்பட்ட அனைவரும் தவறாது விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.   

“மேற்படி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வி பொதுத் தராதர சாதாரணதரப்  பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.  

“இப்பதவிக்கு ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம். உயரம் ஆகக் குறைந்தது 5 அடி 4 அங்குலமாக இருத்தல் வேண்டும். மார்பின் சுற்றளவு- 30 அங்குலம் (ஆகக்குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்) இருத்தல் வேண்டும். வயதெல்லை - 18 வயதுக்குக் குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.   

“விண்ணப்பங்களை எதிர்வரும் 2018 ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்பதாக, பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு), பயிலுநர் ஆட்சேர்ப்பு அலுவலகம், இல- 375, 1ஆம் மாடி, ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, கொழும்பு - 6 என்ற முகவரிக்கு, பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.   

“விண்ணப்பப்படிவங்களை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில், ‘பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி’ (விசேட அதிரடிப்படை) குறிப்பிடுவது அவசியம்.  

“மேற்படி பதவிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், திருமணமாகாதவர்களாக இருத்தல் வேண்டும்.   
“மேற்படி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மலையக இளைஞர்கள், அதற்கான விண்ணப்பங்களை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையகத் தொழிலாளர் முன்னணியின் ஹட்டன் தலைமைக் காரியாலயம், பதுளை பிராந்திய காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய, மாவட்டக் காரியாலயங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.  

“அத்துடன், உள்ளூராட்சிமன்றங்களில் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோரிடமுமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.   

“இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விவரங்களை, 051-2224228, 052-2223052, 055-2229838, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .