2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

புதிய இஸ்லாமிய நாடு உதயம்

Editorial   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை   தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது.

சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது. இதற்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுதான் தற்போது சர்வதேச அரசியலில் ‛டாக் ஆப் தி டவுன்' ஆக உள்ளது.

மேலும் சோமாலிலாந்தை அங்கீகரித்ததன் பின்னணியில் இஸ்ரேல் போடும் மெகா திட்டம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில் இந்திய பெருங்கடல் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது. இந்த 2 கடல்களும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஒன்றாகும்.

இந்நிலையில் தான் சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த சோமாலிலாந்து தனி நாடு கோரியது. சோமாலிலாந்து ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனால் அது முக்கியமான பகுதியாகும். இதனால் சோமாலியா, சோமாலிலாந்தை தனி நாடாக்க விரும்பவில்லை.

இதனால் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்து தனி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. 1991-ல் சோமாலியாவிலிருந்து பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்து செயல்பட்டு வருகிறது. சோமாலிலாந்து மக்கள் தங்களை தனி நாடாக அறிவித்து கொண்டனர்.

சோமாலியா பசி, பட்டினி, வறுமையில் தவித்து வந்தாலும் கூட சோமாலிலாந்து மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள்தொகையில் 99 சதவீதம் பேர் சன்னி இஸ்லாமியர்களாக உள்ளனர். அரபு மொழியை தான் மக்கள் பேசி வருகின்றனர். இந்த சோமாலிலாந்தின் எல்லையாக இப்போது வடமேற்கு பகுதியில் டிஜிபோட்டி நாடும், தெற்கு மற்றும் மேற்கில் எத்தியோப்பியாவும், கிழக்கில் சோமலியாவும் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது. செங்கடலை தாண்டினால் ஏமன் அமைந்துள்ளது. அதன்பிறகு மத்திய கிழக்கு நாடுகள் வரும்.

இதனால் சோமாலிநாந்து முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. சோமாலிலாந்துடன் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தைவான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை பேணி வந்தாலும் கூட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான் சோமாலிலாந்தை முதல் நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். சோமாலிலாந்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகும். அந்த நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சோமாலிலாந்து அதிபர் அப்திர் ரஹ்மான் முகமது அப்துல்லாஹியிடம் பேசியிருந்தார்.

இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் ஸார் மற்றும் சோமாலிலாந்து அதிபர் அப்துர்ரஹ்மான் முகமது அப்துல்லாஹி ஆகியோர் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நடவடிக்கை ஆபிரகாம் ஒப்பந்தத்துக்கு இணங்குவதாகவும், இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இதை விவாதிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களிலும் முக்கிய தீர்க்கதரிசியாக கருதப்படும் ஆபிரகாம் பெயரில் உள்ள உடன்படுக்கையாகம். இது கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய
இஸ்ரேல், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் இடையேயான அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் வழியாக இஸ்ரேல் இஸ்லாமிய நாடுகளுடன் உறவை சுமூகமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆபிரகாம் ஒப்பந்தம் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இதுதான் தற்போது சர்வதேச அளவில் பெரிய கவனம் பெற்றுள்ளது. மேலும் இஸ்ரேலின் இந்த செயலுக்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சோமாலியா, அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளின் எதிர்ப்பை இஸ்ரேல் இப்போது சம்பாதித்துள்ளது. அதுமட்டுமின்றி சோமாலியா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை விரைவில் ஏற்க உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அவசர விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது.

இதுதொடர்பாக ஐநாவில் நாளை அவசர கூட்டம் நடைபெற உள்ளது. சோமாலியா தரப்பில், ‛‛இது ஒரு அபத்தமான முடிவு. ஆக்கிரமிக்கும் முடிவில் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. இதனால் சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த முடிவை உடனடியாக இஸ்ரேல் ரத்து செய்ய வேண்டும்'' என கூறியுள்ளது. சோமாலியா மட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலின் அங்கீகாரத்தை நிராகரித்துள்ளன. இது ஆப்பிரிக்காவின் கொம்பு பிராந்தியம் மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கும் என எச்சரிக்கை செய்துள்ளன.

இந்த சோமாலிலாந்து செங்கடல்-ஏடன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்துக்கு இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் கப்பல்களை செங்கடலில் தான் தாக்குகின்றனர். இப்படியான சூழலில் சோமாலிலாந்தை கைக்குள் வைத்து கொண்டால் அங்கிருந்து ராணுவ தாக்குதல்களை எளிதாக நடத்தலாம். அதோடு ஏமனின் ஹவுதிகளுக்கும் உரிய பதிலடி கொடுக்க முடியும் என்று நெதன்யாகு கணக்கு போட்டுள்ளார்.

இந்த விஷயத்தில் தற்போது அமெரிக்கா விலகியே உள்ளது. சோமாலியாவுடன், அமெரிக்காவுக்கு தற்போது மோதல் போக்கு உள்ளது. அதேவேளையில் இஸ்ரேலுடன் நல்ல நட்பு உள்ளது. மேலும் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் வர்த்தக கப்பல்களுக்கு ஏமன் ஹவுதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இருப்பினும் கூட சோமாலியாவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்ததை டிரம்ப் ஏற்கவில்லை. சோமாலிலாந்து உட்பட சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை தாங்கள் விரும்புவதாக அமெரிக்கா செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X