2026 மே 04, திங்கட்கிழமை

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஐவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில்; ஈடுபட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி கருணாகரன் நேற்று உத்தவிட்டார்.

அத்துடன், இச்சந்தேக நபர்களை பாதிக்கப்பட்டவர்களின் முன்னிலையில் அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிபதி பணித்தார்.

கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்களை நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில்; ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படும் 5 சந்தேக நபர்களை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து தங்கநகைகள்,  போலி கைத்துப்பாக்கி, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை, கனிஷ்ட வித்தியாலய வீதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பெரியகல்லாறு சோதனைச்சாவடியில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், சுமார் 7.5 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள், கைத்துப்பாக்கி ஆகியன கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.ஜி.ஏ.சி.ஆரியரட்ன  தெரிவித்தார். இவர்களால்  கொள்ளையிடப்பட்ட சில தங்கநகைகள் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவைச் சேர்ந்தவர்களெனவும் ஒருவர்  வளத்தாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் அவர் கூறினார்.

கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனவிரட்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரக்கோன், களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே ஆகியோரின் ஆலோசனைக்கமைய களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் வழிகாட்டலில்  பிரதிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஜி.ஏ.சி.ஆரியரட்ன தலைமையில் இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .