2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்: திஸ்ஸவிதாரண

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதற்காக நான் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண மட்டக்களப்பில் வைத்து இன்று தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணியின் சார்பில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுக்கடுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் திஸ்ஸவிதாரண மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு கல்லடி ஓசியனிக் விடுதியில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடாந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

'யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகியும் இன்னும் நிரந்தரமான அரசியல் தீர்வு எடுக்கப்படாதது குறித்து நாம் கவலையடைய வேண்டியுள்ளது. அரசியல் தீர்வு குறித்த விடயங்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த தேர்தலை நாம் பயன் படுத்துகின்றோம்.

நாங்கள் நினைத்த ஐக்கியம் ஒற்றுமை இன்று இல்லை அதைத்தான் கிழக்கு மாகாணத்திலும் பார்க்கின்றோம். சிங்களவர், தமிழர் முஸ்லிம்கள் என வேறுபாடுடன் பிரிந்து நிற்கின்றனர்.

அபிவிருத்தியில் தன்னிறைவு கண்டால் மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
சோஷலிச மக்கள் முன்னணி ஒற்றுமைஇயும் ஐக்கியத்தையும் வலியுறுத்தி இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றது.

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்து கொண்டு நாங்கள் தனியாக போட்டியிடுவதானது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் எமது கட்சிக்கு இடம் ஓதுக்கீடு செய்யப்படாதால் நாம் தனியாக போட்டியிடுகின்றேம்.

ஐந்து இடது சாரி கட்சிகள் கூட்டினைந்ததே சோக்லிச மக்கள் முன்னணியாகும். யுத்தம் முடிந்த போதும் இனக் குரோதம் இன்னும் முடிவடையவில்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு செல்வதன் மூலமே சரியான அரசியல் தீர்வொன்றைக் காணமுடியும்.

அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எனது தலைமையில் சர்வகட்சி குழு அமைக்கப்பட்டு மாநாடுகள் நடைபெற்றன. அதில் 17 கட்சிகளுடன் பேசினோம். அதற்கு 13 அரசியல் கட்சிகள் ஒரு நிலையான திர்;வுக்கு வந்தது. சர்வ கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 21 அம்சங்கள் ஏற்றக்கொள்ளப்பட்டு பின்னர் 5 அம்சங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

திம்பு மாநாடு தொடக்கம் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. டட்லி செல்வா ஒப்பந்தம் பண்டா - செல்வம் ஒப்பந்தம் என அனைத்து ஒப்பந்தங்களும் தோல்விலேயே முடிவடைந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒன்றுபடுவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

இந்த வகையில்தான் இவ்வாறான விடயங்களை முன்வைத்து கிழக்கு மாகாணத்தில் நாம் தனியாக போட்டியிடுகின்றோம். அம்பாறையில் இரண்டு ஆசனங்களையும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தையுமாக கிழக்கு மாகாண சபையில் நான்கு ஆசனங்களை நாம் பெறுவோம். எங்களது கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளர் உட்பட சிறந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, 'அரசாங்கத்தில் நாங்கள் பங்காளிகளாக இருந்த போதிலும் அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றையும் நாங்கள் கேட்கமாட்டோம். அதேபோன்றுதான் நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் அரசாங்கம் கேட்கப்போவதில்லை.

இந்த நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமை உள்ளது. சோஷலிச மக்கள் முன்னணி சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில்தான் இந்த தேர்தலையும் நாம் எதிர்க்கொள்கின்றோம்.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் அந்த அதிகாரங்களை மாகாண சபைகள் மக்களுக்கு வழங்கவேண்டும். இன்று இந்த நாட்டில் விவசாயம், கடற்றொழில், சிறுகைத்தொழில் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் இவற்றை முன்னெடுக்க வேண்டும்' தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் கணபதிப்பிள்ளை பரணிகரன் உட்பட வேட்பாளர்கள், அக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .