2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெற்றிலை மேல் நின்றுதான் இம்முறை சேவல் கூவும்

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் ​அடிப்படையிலேயே, இம்முறைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, காங்கிரஸால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் இடையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்​பெற்றதென, மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.  

கொட்டகலைப் பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட போ​து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மே‌ற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து ​கருத்துத் தெரிவிக்கையில்,   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,   

“நோர்வூட் மற்றும் மஸ்கெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால், நீக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.   

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன், நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியே அவர்களதும் எங்களதும் வேட்பாளர் பட்டியலைத் தீர்மானித்தோம். நாங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களை வேட்பாளர் பட்டியலில் இட்டுள்ளோம்.  

“அதேபோல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, வேட்பாளர்களை அவர்கள் கேட்ட தொகுதிக்கு இணங்க ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆசனங்களுக்கான வேட்பாளர்களைக் கொடுத்துள்ளனர். அதேபோல், அவர்கள் கேட்ட ஆசனங்களுக்கான வேட்பாளர்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம். யாரையும் நீக்கவில்லை.  

“அவர்களது வேட்பாளர்களை நீக்குவதற்கு எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை. யார் யாரை அவர்கள், பரிந்துரை செய்தார்களோ அவர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளோம்.  

“தலவாக்கலை- லிந்துலை நகரசபையிலே 3 வேட்பாளர்களைக் கேட்டார்கள். அவர்களுக்கு அந்த மூன்று வேட்பாளர்களையும் கொடுத்துள்ளோம். அதில் ஒருவர், சிறுபான்மையின வேட்பாளர். இருவர், பெரும்பான்மையின வேட்பாளர்கள்.   

“அதேபோன்று, நுவரெலியா பிரதேச சபை சபைக்கு ஐந்து பெரும்பான்மையின வேட்பாளர்களைப் பரிந்துரை செய்தார்கள். அதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.  

“அதேபோல் ஹட்டன் - டிக்கோயா நகரசபை, மஸ்கெலியா பிரதேச சபை போன்றனவற்றுக்கு, அவர்கள் பரிந்துரை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிந்துரையின் படி கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அது அவர்கள் கட்சிக்கு உட்பட்ட விடயமாகும்.   

“அவ்வாறான பிரச்சினையை, சுதந்திரக் கட்சியுடனேயே ​பேசித் தீர்வு காண வேண்டும். பெயர்களை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நீக்கியுள்ளது எனக் குறை கூறுவதில் எவ்வித நியாயமும் இல்லை” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .