2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கணினி அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான 8ஆவது சர்வதேச மாநாடு

A.P.Mathan   / 2013 மே 13 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெற்ற கணினி அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான 8ஆவது சர்வதேச மாநாட்டிற்கு SLIIT அனுசரணையை வழங்கியிருந்தது. இம் மாநாட்டினை சீனாவின் கணினி கல்விக்கான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிற்கான தேசிய ஆராய்ச்சி சபை ஏற்பாடு செய்திருந்ததுடன், இணை தொழில்நுட்ப அனுசரணையை IEEE ஸ்ரீலங்கா பிரிவு வழங்கியிருந்தது. இந் நிகழ்விற்கான உத்தியோகபூர்வ விமான அனுசரணையை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கியது.
 
கடந்த 2006ஆம் ஆண்டு சீனா Xiamen ஆரம்பிக்கப்பட்டது முதல், கணினி அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான இச் சர்வதேச மாநாடு வெளிநாட்டு கல்வி நிலையங்கள், உயர்கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணர்கள், கல்விமான்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த ICCSE 2013இன் பொது தலைவர் பேராசிரியர் லலித் கமகே, 'தற்போது இலங்கையானது அரசாங்கத்தின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக பிராந்திய ரீதியில் மிக முக்கிய வளர்ச்சி மையமாக மாறி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இம் மாநாட்டில் பங்கேற்பதற்கு உலகம் பூராகவும் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடுவதுடன், பொறியாளர்களுக்கான கணினி அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான நவீன போக்குகள் மற்றும் துறைசார் கண்டுபிடிப்புகள் தொடர்பான பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இம் மாநாட்டில் மூன்று மிக முக்கிய உரைகள் இடம்பெற்றன. அவற்றில் பதினாறு தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் பதினொரு சிறப்பு ஒன்-லைன் அமர்வுகள் போன்றன அடங்கும். 15 பிராந்தியங்கள் மற்றும் நாடுகளிலிருந்து கிடைத்த 618 சமர்பித்தல்களிலிருந்து உயர் தர கையெழுத்து பிரதிகளின் அடிப்படையில் 293 பங்களிப்பு தாள்கள் மாநாட்டு திட்டக் குழு நடாத்தும் கடுமையான பரீசீலணைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது' என்றார்.
 
இம் மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சின் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவிக்கையில், 'இச் சர்வதேச மாநாட்டினை வெற்றிகரமாக கொழும்பில் மிக நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்த SLIIT நிலையத்தை பாராட்டுகிறேன். இன்றைய அபிவிருத்தி பணிகளில் கல்வி மிக முக்கிய பங்காற்றுகிறது. முறையான கல்வி முறைமைக்கு அமைய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் மிக முக்கிய தகுதிகளாக காணப்படுகிறது. எனது கருத்துப்படி தற்போது இலங்கையானது கல்வி முறைமைக்கு உதவும் வகையில் விரிவான ஆராய்ச்சி பின்னணி கொண்ட கல்விமான்களை உருவாக்குவது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளுக்கான முதலீடாக 0.15% GDP ஆக உள்ளதுடன், இதுவே கடந்த பல ஆண்டுகளில் பிராந்திய ரீதியில் பதிவாகிய மிகக் குறைவான முதலீடாக உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளை பொறுத்தவரை 2.3% வீதமாகவும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை பொறுத்தவரை 1% வீதமாகவும் காணப்பட வேண்டும். 2016 ஆம் ஆண்டளவில் பொது துறையினரின் 1% வீத பங்களிப்புடன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான முதலீட்டினை 1.5% GDP ஆக உயர்த்துவதே எமது தற்போதைய குறிக்கோளாக அமைந்துள்ளது. எமது கல்வி சமூகம் மற்றும் துறைசார் தலைவர்களுடனான உங்களது பரஸ்பர தொடர்பு மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பின் மூலம் இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளில் புதிய பாதையை உருவாக்கும் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.
 
இம் மாநாட்டில் நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வுகளில் கிளாரென்ஸ் டபிள்யு.டி.சில்வா, கனடா பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் Mechatronics and Industrial Automationஇன் பேராசிரியர் மற்றும் சிரேஷ்ட கனடா ஆராய்ச்சி தலைவர், அசோக் ரே- அமெரிக்கா மற்றும் Zhong Wende இன் பென்சில்வேனியாவின் இயந்திர பொறியியல் பேராசிரியர், சிங்கப்பூர் நயாங் டெக்னிக்கல் பல்கலைக்கழகத்தின் தொலைத்தொடர்பாடல் பொறியியல் பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .