
-சுமித்தி தங்கராசா
ஹற்றன் நஷனல் வங்கியின் மெட்ரோ கிளை அண்மையில் யாழில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மின்சார நிலைய வீதியில் சுமார் 400 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சூழல் நேய பசுமைக் கட்டிடத்தினை ஹற்றன் நஷனல் வங்கியின் பதில் நிறைவேற்று அதிகாரி ஜொனாதன் லெஸ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.
தமிழ் இன்னிய இசை முழக்கத்துடன், ஹற்றன் நஷனல் வங்கியின் பழைய வங்கியில் இருந்து அழைத்து வரப்பட்டு, தேசிய கொடி ஏற்றத்துடன், வங்கிக்கான கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இதன்போது, தொழிலதிபர் இ.ச.நாகரத்தினம், பதில் நிறைவேற்று அதிகாரி ஜொனாதன் அலஸிடம் முதற் வங்கி கணக்கினை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், லயன் தேவராஜன் பதில் நிறைவேற்று அதிகாரிக்கு வாழ்த்துப் பாமாலை வழங்கி வைத்தார்.
வட பிராந்தியத்தில் சுமார் 22 வாடிக்கையாளர் நிலையங்களை கொண்ட ஹற்றன் நஷனல் வங்கியானது, யாழ். மாவட்டத்தில் 16 கிளைகளை கொண்டுள்ளது.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி கட்டிடத் தொகுதியில், சூழல் நேயத்தினை மெருகூட்டும் வகையில், பல்வேறு அம்சங்களை அடக்கியுள்ளதுடன், வடபிராந்திய காரியாலயமும், பொது மக்களின் பாவனைக்கென கேட்போர் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வங்கி திறப்பு விழாவில், வாடிக்கையாளர்கள் உட்பட வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.