2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நான்கு அடிப்படை அம்சக் கொள்கைகள் முன்மொழிவு

S.Sekar   / 2022 நவம்பர் 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள தேசிய நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு, சொத்துக்களை விற்பனை செய்வது என்பது இலகுவான தீர்வாக அமைந்திருந்தாலும், நஷ்டமீட்டி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதனூடாக, அவற்றை தூய, அனுபவம் வாய்ந்த கூட்டாண்மை அதிகாரிகளைக் கொண்டு நிர்வகிக்கப்பதனூடாக இலாபமீட்டக்கூடிய வகையில் மாற்றியமைக்க முடியும் என SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ தெரிவித்தார். அரச உரிமை நிறுவனங்கள் – அவை முறையாக நிர்வகிக்கப்படுகின்றனவா அல்லது தவறாக நிர்வகிக்கப்படுகின்றனவா எனும் தலைப்பில் இடம்பெற்ற CMA தேசிய நிர்வாக கணக்கீட்டு மாநாடு 2022 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பெர்னான்டோ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “பல்வேறு பிரிவுகளில் எமது நாடு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. தற்போது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது என்பது பற்றி, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பது பற்றி கவனம் செலுத்தும் அரசாங்கம், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் நன்கொடை வழங்குநர்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் விடயமாக அமைந்துள்ளது.” என்றார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில், “எமது நிறுவனத்தை (SLT) உதாரணமாக எடுத்துக் கொண்டால், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெறுவதற்கு, எமது அடிப்படைக் கொள்கைகளான மோசடி இன்மை, வினைத்திறனை மேம்படுத்துவது, விரயத்தைக் குறைப்பது மற்றும் நிர்வாகத்தை ஈடுபடுத்துவது போன்றன தொடர்பில் அவர்களின் உடன்பாட்டைப் பெற்றோம். ஆம், இந்த நான்கு அம்சங்களையும் முன்வைத்து, எமது ஊழியர்களுடன் எவ்விதமான முரண்பாடுகளுமின்றி எம்மால் இயங்க முடிந்தது.” என்றார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில், “அளவுக்கதிமான சுமையைக் கொண்டுள்ள எமது போக்குவரத்து துறையை எடுத்துக் கொண்டால், புகையிரதத் திணைக்களம் நிலையான உட்கட்டமைப்புகளில் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளைக் கொண்டுள்ளது. இந்த தண்டவாளங்களில் எந்த வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்கின்றன என்பதை நாம் அவதானிக்கின்றோம்? ஊழியர்களின் பங்கேற்புடன் இவற்றை விற்பனை செய்ய வேண்டுமா அல்லது மீளமைக்க வேண்டுமா? சிந்திக்க வேண்டிய விடயம். நெரிசலான நேரத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுகின்றமை, அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றுகின்றமை, நெருக்கடி, போதியளவு திட்டமிடல் இன்மை, எரிபொருள் விரயம் போன்றன தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும். தேசிய சுமையிலிருந்து இலாபமீட்டும் முத்தாக மாற்றக்கூடிய ஒரு அரச நிறுவனமாக இது அமைந்துள்ளது.” என்றார்.

நாட்டின் சட்டக் கட்டமைப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக இலங்கையின் நீதிச் செயன்முறையை மேம்படுத்தி, காலதாமதமின்றி தீர்ப்புகளை வழங்க முடியும். அதிகளவான வழக்குகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றமை போன்றன காரணமாக, எமது குடிமக்களுக்கு பொருத்தமான சட்ட மீளமைப்பு மற்றும் சமத்துவமான நிவாரணத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடையே போதியளவு ஒன்றிணைவு இன்மையால், கட்டமைப்பு அதிகளவு சுமையைக் கொண்டதாக காணப்படுகின்றது. பெருமளவானோர், தமது அதிக நாட்களை நீதிமன்றத்தில் செலவிட்ட போதிலும், தமது வழக்கு தொடர்பில் மிகவும் குறைந்த தகவல்களுடனே வெளியே வருகின்றனர்.” என்றார்.

பெர்னான்டோ மேலும் குறிப்பிடுகையில், “எமது விவசாய பெறுமதி சங்கிலியும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அதுபோலவே எமது சுகாதாரப் பராமரிப்பு துறையும் சுமைகளை எதிர்கொண்டுள்ளது. சவால்களை புரிந்து கொண்டு, இந்த பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் மற்றும் சேவைகள், வினைத்திறன் வாய்ந்த, வெளிப்படையான மற்றும் இலாபமீட்டும் அமைப்புகளாக மாற்றப்படுவதனூடாக, மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க அவற்றை பயன்படுத்த முடியும். இந்நாட்டுக்கு தேவையான உண்மையான கட்டமைப்பு மாற்றமாக இது அமைந்துள்ளது. தற்போது அரச நலன்புரித் திட்டங்கள் செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என பாகுபாடின்றி அரசியல் தலையீட்டின் காரணமாக அனைவரையும் சென்றடைகின்றன.  உண்மையில் இந்த நலன்புரித் திட்டங்கள், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் காணப்படுவோரை முறையாக இனங்கண்டு, அவர்களை சென்றடையச் செய்ய வேண்டும். இதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை பயன்படுத்தலாம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .